இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு


தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நிலையில், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமாவுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று, 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்தரின் எழில்மலை 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்திருந்தார்.

இதேபோல், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று, 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கெளரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவான பின்னர், பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இருவரையும் அக்கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் தாராபுரம் தொகுதிகளில் எஸ்.சுகன்யாவும் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும் போட்டியிடுவார்கள் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Scroll to Top